எனக்குள் நான் நிகழ்ச்சி எதிர்கால இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும்: மாணவிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் அறிவுரை

கூடுவாஞ்சேரி: சர்வதேச உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த, எனக்குள் நான் நிகழ்ச்சியில், எதிர்கால இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும் என மாணவிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் அறிவுரை வழங்கினார்.  வருகிற 11ம் தேதி சர்வதேச உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சமூக நலன், மகளிர் உரிமை துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், ‘எனக்குள் நான்‘ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியைஸ்ரீவித்யா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் கலந்துகொண்டு மாணவிகள் வளர் இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பிரச்சனைகள் இடையூறுகள் அனைத்திற்கும் தீர்வு காண்பது, மாணவிகள் சத்தான உணவை உண்பது, குழந்தை திருமணம் மற்றும் இளம் வயது திருமணம் குறித்தும் எடுத்துரைத்தார்.

மேலும், பள்ளியை கல்வித் துறையின் மூலம் கல்லூரி கனவு, உயர்வுக்கு படி மூலம் அனைத்து மாணவியரின் உயர் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்தும், மாணவிகள் விடாமுயற்சியுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கால இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும் என அறிவுரை கூறினார். இதனைத் தொடர்ந்து 2500 மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்களை வழங்கினார்.

Related posts

சந்திரயான் -5 திட்டத்துக்கு அனுமதி

234 தொகுதிக்கு பார்வையாளர்களை நியமித்தது திமுக

லடாக்கில் லேசான நிலநடுக்கம்