இந்தக் காய்களை ஒரு கிலோ ₹40 என விற்பனை செய்தோம். கடந்த 3 மாதத்தில் ₹6 லட்சம் வரை செலவாகியிருக்கிறது. முதல் அறுவடையில் ₹3 லட்சம் வரை வருவாய் கிடைத்தது. விலை சராசரியாக ₹20க்கு குறையாமல் கொள்முதல் செய்யப்பட்டாலே போதும். இதில் லாபம் நிச்சயம். வாரந்தோறும் ஒரு அறுவடை நடக்கும். இது 9 மாதப் பயிர் என்பதால் அதிகபட்சமாக சுமார் 40 முதல் 50 முறை அறுவடை செய்யலாம். ராயக்கோட்டை வியாபாரிகளே நேரடியாக தோட்டத்திற்கு வந்து வால் கத்தரியை கொள்முதல் செய்து கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்புகிறார்கள். கேரளாவில் பொரியல், அவியல் என அனைத்திற்கும் வால் கத்தரிக்காயை பயன்படுத்துகிறார்கள். இதேபோல், கர்நாடகாவிலும், வட மாநிலங்களிலும் வால் கத்தரிக்காயை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள். வட மாநிலங்களில் வால் கத்தரிக்காய் மூலம் தயாரிக்கப்படும் உணவான வாங்கிபாத் ரொம்ப ஃபேமஸ். கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையின்போது, வால்கத்தரிக்காயின் தேவை அதிகமாக இருக்கும். அப்போது ஒரு கிலோ ₹70 வரை கூட விலை போகும். அந்த சமயங்களில் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறைந்த பட்சமாக ஒரு அறுவடைக்கு 5 டன் மகசூல் கிடைத்தாலே 40 அறுவடையில் 200 டன் மகசூல் கிடைக்கும். இதை சராசரியாக ரூ.20 என விற்பனை செய்வதன் மூலம் ரூ.40 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் செலவும் அதிகம். அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை செலவானால் கூட ரூ.20 லட்சம் லாபம் கிடைக்கும். சில சமயங்களில் குறைந்த விலை கிடைத்து குறைந்த லாபமும் கிடைக்கும். ஆனால் லாபம் என்பது உறுதியானது. இப்போது நான் ஓரளவு பொருளாதாரத்தில் சிறப்பான நிலையில் இருக்கிறேன். இதற்கு வால்கத்தரிக்காய்தான் காரணம்’’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தொடர்புக்கு:
முருகன் – 99430 46933.
தக்காளி போல் கயிறு கட்ட வேண்டும்
வால் கத்தரி வளர ஆரம்பித்ததும் களைகளும் சேர்ந்து வளரும். இதனால் ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது களை எடுக்க வேண்டும். காய் பிடிக்க ஆரம்பித்ததும் செடி தரையில் படுத்துவிடும். இதனால் தக்காளிச் செடிக்கு கயிறு கட்டுவது போல், வால் கத்தரிக்கும் பந்தல் அமைத்து ஒவ்வொரு செடியையும் தனித்தனியாக தூக்கி நிறுத்தும் வகையில் கயிறு கட்ட வேண்டும். இதற்கு பந்தல் அமைக்க தனியாக ஒரு ஏக்கருக்கு ₹1 லட்சம் வரை செலவாகும்.
உர மேலாண்மை
கடலைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு, டிஏபி உரம் ஆகியவற்றை சம அளவில் வாங்கி, பெரிய பிளாஸ்டிக் டிரம்மில் கொட்டி அதில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, இந்தக் கலவையை அடிக்கடி கிளறிவிட வேண்டும். மூன்று நாளில் அந்த உரக் கலவை நன்றாக பொங்கி நிற்கும். அந்த நீரை செடிக்குச்செடி ஊற்றிவிட்டால் பூச்சிகள் கட்டுப்படுவதோடு, செடிக்கு ஊட்டமாகவும் இருக்கும். இந்த உரம் தவிர, டிரிப் உரமாக அதிகாரிகள் கூறும் ரசாயன உரமும் கொடுக்கப்படுகிறது.