சென்னை: சமூக வலைதளம் மூலம் பழகி 58 சவரன் நகைகள், ரூ.1.50 லட்சம் மோசடி செய்ததாக, பேராசிரியை கொடுத்த புகாரின்பேரில், சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், காட்பாடி வைபவ் நகரை சேர்ந்தவர் ரேணுகாதேவி (34). தனியார் கல்லூரி உதவி பேராசிரியை. திருமணமாகி 1 பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்கிறார். 2 ஆண்டுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் சென்னை ஆலந்தூரை சேர்ந்த புவனேஷ் (37) என்பவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் தொடர்ந்து ‘சாட்’ செய்து வந்தனர். இந்நிலையில் தனக்கு கடன் பிரச்னை இருப்பதாக கூறி உதவி செய்யும்படியும் புவனேஷ் கேட்டுள்ளார். இதனை நம்பி ரேணுகாதேவி 58 சவரன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கடந்த 2021 மார்ச் மாதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவற்றை திருப்பித்தராமல் பல மாதங்களாக அலைக்கழித்துள்ளார். திருப்பி கேட்டபோது மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் ரேணுகா தேவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து புவனேஷை கைது செய்தனர்.