தீப்பிடித்து எரிந்த தயாரிப்பாளர் கார் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு நாசம்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தத்தில் சினிமா தயாரிப்பாளரின் கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் கருகியதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்தவர் அபி நரசிம்மன் (52). இவர் சினிமா தயாரிப்பாளராகவும், தேன் வியாபாரமும் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக சேலம் மாவட்டம் மேட்டூரில் அலுவலகம் உள்ளது. இவர் மேட்டூரில் அவ்வப்போது தேன் வாங்கிக்கொண்டு சென்னைக்கு சென்று விற்பனை செய்வாராம்.

இதேபோல் நேற்று அபி நரசிம்மன் தனது காரில் தேனுடன் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பையனப்பள்ளி கூட்ரோடு அருகே சென்றபோது, காரின் முன் பக்கத்தில இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காரில் இருந்து கீழே இறங்கி பார்த்துள்ளார். இதற்கிடையில் கார் நடுரோட்டில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இதையடுத்த போலீசார் காரை ஆய்வு செய்தபோது, காரில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தது. விசாரணையில் அவைகள் அனைத்தும் சினிமாவில் பயன்படுத்தப்படும் ஒரு பக்கம் மட்டுமே பிரிண்ட் செய்யப்பட்ட ரூ.2 ஆயிரம் ரூபாய் டம்மி நோட்டுகள் என்பது தெரியவந்தது.

Related posts

பல்கலைக்கழக இணை வேந்தரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை

ஜில்லுனு ஜூஸ் குடிச்சு உடம்ப ஜில் பண்ணுங்க… மண்டையை பிளக்கும் வெயிலை சமாளிக்க வழி இருக்கு…

பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் புதிய திட்டம்