சென்னை: தமிழகத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்திக் கொள்ளும் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழகத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் மாதத்தில் இருந்து செலுத்தப்படும் தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தவணை தடுப்பூசிகள் கூடுதல் விலையில் செலுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை மொத்தமாக 16 தவணை தடுப்பூசியை இனி குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது.