பெரியபாளையம்: பெரியபாளையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் இரு தனியார் தொண்டு நிறுவனங்களின் முப்பெரும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, தனியார் டிரஸ்ட் இயக்குனர் ஜெய பரசுராமன் தலைமை தாங்கினார். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேலுமயில் அனைவரையும் வரவேற்றார்.
பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏழுமலை, நந்தன், திராவிடமூர்த்தி, ரஜினாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லிட்டரஸி இண்டியா டிரஸ்ட் சார்பாக முதியோர் கல்வி கற்கும் பத்து நபர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. பின்னர், முதியோர்களுக்கு கல்வி கற்பிக்கும் பத்து ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் புத்தகம், தட்டு உள்ளிட்டவை அடங்கிய நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும், 21 தூய்மை பணியாளர்களுக்கு பெட்ஷீட், குடை, மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.