சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனியார் மினி பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசுப் பேருந்துகளின் வருவாய் மேலும் குறைவதோடு மட்டுமல்லாமல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகும்.
மினி பேருந்து சேவையை துவக்குவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. இதனை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இதில் தனியாரை அனுமதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, முதல்வர் இதில் உடனடியாக தனது கவனத்தைச் செலுத்தி, சென்னை புறநகரில் தனியார் சிற்றுந்துகள் அனுமதிக்கப்படுவதை கைவிட வேண்டும், மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டும்.