சென்னை: தமிழ்நாட்டில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க அரசுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகளும், 9 தனியார் சட்டக் கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப்படிப்பை வழங்கி வருகின்றன. இந்நிலையில், 11 தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், தமிழ்நாட்டில் தனியார் சட்டக் கல்லூரிகளை முறைப்படுத்த 2018ம் ஆண்டு அரசு இயற்றிய சட்டத்தில் அரசு சட்டக்கல்லூரிகள் உள்ள மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கலாம். தனியார் சட்டக் கல்லூரிகள் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றுவதில்லை. ஏழை மற்றும் விளிம்பு நிலை மாணவர்கள் குறைந்த செலவில் சட்டக் கல்வியை பெறமுடியாது. தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்கப்பட்டால் சட்டக் கல்வியின் தரம் தாழ்ந்து விடும்.
எனவே, தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதை கைவிட்டு, சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக சட்ட கல்லூரிகள் தொடங்கவும், தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க அரசுக்கு தடை விதிக்கவும் வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி வி.எஸ்.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.