தனியார் சிற்றுந்துகளை அனுமதிக்கக்கூடாது; மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டும்.! ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: சிற்றுந்து திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில், சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள மணலி, திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முதன்முறையாக தனியார் சிற்றுந்துகளை இயக்க அனுமதி வழங்குவது குறித்து பேசப்பட்டதாகவும், இந்தத் தனியார் சிற்றுந்து திட்டத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

தனியார் மினி பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசுப் பேருந்துகளின் வருவாய் மேலும் குறைவதோடு மட்டுமல்லாமல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகும். மினி பேருந்து சேவையை துவக்குவதில் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை.

இதனை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இதில் தனியாரை அனுமதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது, பேருந்துக் கட்டண உயர்வு அடிக்கடி ஏற்படவும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பின்மை உருவாகவும் வழிவகுக்கும். எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தனது கவனத்தைச் செலுத்தி, சென்னை புறநகரில் தனியார் சிற்றுந்துகள் அனுமதிக்கப்படுவதை கைவிட வேண்டும், மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு!

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு

ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் பரப்புரை நிறைவு