தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே பேரூரணி மாவட்ட சிறைச்சாலையில் 2வது தொகுதியில் அடைக்கப்பட்டிருந்த 57 கைதிகளில் 46 பேருக்கு இடையே கடந்த 7ம் தேதி இரவு மின்விசிறியின் கீழ் பாய் விரித்து படுப்பதில் தகராறு ஏற்பட்டது. கைதிகள் இரு பிரிவாக பிரிந்து மோதிக் கொண்டனர். சரமாரியாக கைகளால் தாக்கிக் கொண்டனர். இதில் 17 டியூப் லைட்டுகள், எல்இடி டிவி, சிசிடிவி கேமரா, சுவிட்ச் போர்டு ஆகியவை உடைக்கப்பட்டன.
புகாரின்படி தட்டப்பாறை போலீசார், 46 கைதிகள் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது, சிறைக்குள் கலவரத்தை ஏற்படுத்தி அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறைத்துறை டிஐஜி பழனி நேரில் விசாரணை நடத்தினர். சிறைத்துறை எஸ்பி செந்தாமரை கண்ணன், தூத்துக்குடி போலீஸ் எஸ்பி ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து 46 கைதிகளும் கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.