புதுடெல்லி: பிரதமர் மோடியை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று சந்தித்து பேசினார். ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா நிர்வாக தலைவர் மற்றும் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ஜனவரி மாதம் 31ம் தேதி கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு முன்னதாக ஹேமந்த் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரன் கடந்த மாதம் 28ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இதனை தொடர்ந்து 4ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஹேமந்த் சோரன் இது மரியாதை நிமித்தான சந்திப்பு என குறிப்பிட்டுள்ளார்.