ஜகதல்பூர்: மக்கள் தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்படுமா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசானது நேற்று முன்தினம் ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டது. இதில் மொத்த மக்கள் தொகையில் ஒபிசி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் 63 சதவீதம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய உரிமைகளை வழங்குவதற்கு நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் தேவை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டீஸ்கரின் ஜகதல்பூரில் நடந்த பரிவர்த்தன் மகாசங்கல்ப் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘மக்கள் தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்படுமா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் தொகை தான் உரிமைகளை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் என்னை பொறுத்தவரை நாட்டில் உள்ள வளங்கள் மீது ஏழை மக்களுக்கு தான் முதல் உரிமை உண்டு. ஏழைகள் நலனே எனது நோக்கமாகும். காங்கிரஸ் கட்சியானது வேறு சில நாடுகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக பேசுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.