புதுக்கோட்டை, நவ.8: புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்புதுக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பு:2023-24ம் ஆண்டிற்கான சிறப்பு பருவம் நெல் -ஐஐ சம்பா பருவத்தில் பயிர் சாகுபடி செய்து வரும் நிலையில் விவசாயிகள் அனைவரும் நெல் பயிருக்கு காப்பீடு செய்திட கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதலில் இருந்தும் மகசூல் இழப்பு பாதிப்பில் இருந்தும் தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும், வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு பிரீமியம் தொகையான ரூ.513 செலுத்தி காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு இம்மாதம் 15.11.2023ம்தேதி கடைசி நாள் ஆகும். பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான முன்மொழிவு படிவம், நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.