அகர்தலா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா 500 கிலோ அன்னாசி பழங்களை அனுப்பி வைத்தார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாள் பயணமாக கடந்த 21ம் தேதி இந்தியா வந்தார். புதுடெல்லியில் அவருக்கு பிரதமர் மோடி உற்சாக வரவேற்பளித்தார். இதைதொடர்ந்து இந்தியா, வங்கதேசம் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்களில் மோடியும், ஷேக் ஹசீனாவும் கையெழுத்திட்டனர். இந்நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ராணி அன்னாசி பழங்களை திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து திரிபுரா தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தீபக் பைத்யா கூறும்போது, “முதல்வர் மாணிக் சாஹாவின் முயற்சியால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 500 கிலோ அன்னாசி பழங்களை 100 பாக்கெட்டுகளில் அனுப்பி உள்ளோம். ஒவ்வொரு பாக்கெட்டிலும் 750 கிராம் எடையுள்ள 6 அன்னாசி பழங்கள் உள்ளன. இவையே உலகின் சிறந்த அன்னாசி பழங்கள்” என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு மாம்பழங்களை அனுப்பி வைத்த ஷேக் ஹசீனாவுக்கு திரிபுரா முதல்வர் சாஹா அன்னாசி பழங்களை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.