புதுடெல்லி: ஏழைகளுக்கான பிரதமரின் வீடு கட்டும் திட்டம் எண்ணற்றோர் வாழ்க்கையை மாற்றி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலுமான ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரசிலிருந்து விலகி கடந்த வாரம் பாஜவில் இணைந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நான் சி.ஆர்.கேசவனை சந்தித்தேன்.
அவர் தனது வீட்டில் சமையல்காரராக வேலை பார்க்கும் என்.சுப்புலட்சுமி எழுதிய மனதை தொடும் கடிதத்தை பகிர்ந்து கொண்டார். மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி நிதிப் பிரச்னை உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மூலம் வீடு கட்டியதையும், வீடு கட்டியதன் மூலம் தனது வாழ்க்கையில் மரியாதையையும், கண்ணியத்தையும் பெற்றதை தனது நன்றியையும் ஆசீர்வாதத்தையும் தெரிவித்துள்ளார். இது போன்ற ஆசீர்வாதங்கள் மிகப்பெரிய பலத்தை தருகின்றன. இவ்வாறு கூறியுள்ளார்.