புதுடெல்லி:‘‘கல்வித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்ட எதிர்கால கொள்கைகள் மற்றும் முடிவுகள், சர்வதேச அளவில் இந்திய பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகாரத்தை அதிகரித்துள்ளன’’ என பிரதமர் மோடி பேசினார். டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: சமீபத்தில் க்யூஎஸ் உலகளாவிய தரவரிசைப் பட்டியலில், இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை கடந்த 2014ல் 12ல் இருந்து இப்போது 45 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் திறன் மற்றும் நம் இளைஞர்கள் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன. இதன் காரணமாக, இந்தியாவுக்கான உலகளாவிய மரியாதை மற்றும் கவுரவம் அதிகரித்துள்ளது. இதே போல, கல்வித்துறையில் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்ட எதிர்கால கொள்கைகள் மற்றும் முடிவுகள் சர்வதேச அளவில் இந்திய பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகாரத்தை அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
* மெட்ரோவில் பயணம் டெல்லி பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது மெட்ரோவில் பயணித்த மாணவர்கள் மற்றும் பொது மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.