Saturday, September 28, 2024
Home » தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு தான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் : ப.சிதம்பரம்

தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு தான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் : ப.சிதம்பரம்

by Porselvi

சென்னை : அகில இந்திய அளவில் 234 இடங்களை இந்தியா கூட்டணி பெற்றது சாதாரண வெற்றி அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம்,”மோடி மற்றும் அமித் ஷாவின் பொய் பிரச்சாரம் அம்பலமாகி உள்ளது. 4-வது, 5-வது சுற்று வாக்குப்பதிவு நடக்கும்போதே 350, 400 தொகுதிகளில் வெற்றி என கிளப்பி விடப்பட்டது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றமைக்கு தமிழ்நாடு-புதுச்சேரி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அளவில் 234 இடங்களை இந்தியா கூட்டணி பெற்றது சாதாரண வெற்றி அல்ல. 400 இடங்கள் இலக்கு வைத்திருந்த பாஜக 240 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. பாஜகவுக்கு மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு செயற்கையாக தயாரிக்கப்பட்டது. வாக்களித்தவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட அனைவருமே 350 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என தெரிவித்தனர்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். பாஜகவுக்கு நாட்டு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர். நேருவுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வதை காங்கிரஸ் கட்சியினரும், நாட்டு மக்களும் நிராகரித்துவிட்டனர். தேர்தல் முடிவுகள் அனைத்துக் கட்சியினருக்கும் படிப்பினைதான். சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது.

பங்குச்சந்தையின் வளர்ச்சி இந்திய பொருளாதார வளர்ச்சியை காட்டவில்லை. பங்குச்சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ளது வளர்ச்சி அல்ல; வீக்கம்.இவிஎம் முறை வேண்டாம் என கூறவில்லை; நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்றே கூறுகிறோம்.தேர்தல் முடிவால் மோடியும் பாஜகவினரும் களையிழந்து, பொலிவிழந்து, உற்சாகம் இழந்துள்ளனர். தேர்தலில் மோடிக்கு தார்மீக தோல்வி கிடைத்துள்ளது. அரசியல் சாசனத்தை தேர்தல் முடிவுகள் மூலம் மக்களே காத்துள்ளனர். நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம். அதில் மோடிக்கு என்ன பிரச்னை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.,”இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi