Sunday, September 8, 2024
Home » பிரதமர் மோடி – ராகுல் ஒப்பீடு குறித்து கார்த்தி சிதம்பரம் பேசிய கருத்தால் சலசலப்பு; விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதா தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு?.. ஆலோசனை நடத்தியும் பதில் சொல்லாமல் கிளம்பிய கே.ஆர்.ராமசாமி குழுவால் பரபரப்பு

பிரதமர் மோடி – ராகுல் ஒப்பீடு குறித்து கார்த்தி சிதம்பரம் பேசிய கருத்தால் சலசலப்பு; விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதா தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு?.. ஆலோசனை நடத்தியும் பதில் சொல்லாமல் கிளம்பிய கே.ஆர்.ராமசாமி குழுவால் பரபரப்பு

by MuthuKumar

சென்னை: பிரதமர் மோடி – ராகுல் ஒப்பீடு குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசிய கருத்தால் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு எழுந்துள்ள நிலையில், அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற டெல்லி மேலிடத்தில் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ‘‘பிரதமர் மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை’’ என பேசியிருந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக இந்தியா கூட்டணி தீர்மானம் இயற்றியுள்ள நிலையில், அதற்கு ஆதரவாகவும், மோடிக்கு இணையாக ராகுல் காந்தி இல்லை எனவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து டெல்லியில் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கார்த்தி சிதம்பரத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியிடம் கேட்ட போது, ‘‘எனக்கு அதை பற்றிய தகவல் எதுவும் முழுமையாக கிடைக்கவில்லை’’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எனக்கு அப்படி நோட்டீஸ் எதுவும் வரவில்லை. நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. என்னுடைய பேட்டியை முழுமையாக பார்த்தால் நான் என்ன பேசினேன் என்று தெரியவரும்’’ என்றார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், சத்தியமூர்த்திபவனுக்கு நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி திடீரென ஆலோசனை நடத்தியது. இதில், குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, உறுப்பினர்கள் உ.பலராமன், இதாயத்துல்லா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கார்த்தி சிதம்பரம் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்து கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கார்த்தி சிதம்பரம் தொடர்பான கேள்வியை அவரிடமே கேளுங்கள். உங்கள் இஷ்டத்துக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது’’ என்றார்.

ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் எதிர்ப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி, குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருப்பதாக வெளிவரும் தகவல் உண்மையா? பேட்டியை முழுமையாக பார்த்து அதற்கு பிறகு தவறு இருந்தால் அதை பற்றி குறிப்பிடலாம். ஒழுங்கு நடவடிக்கை குழு என்ற பெயரில் இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தால் அதற்கு எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன்’’ என கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

twenty + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi