சென்னை: தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்குபவர்களுக்கு, லிட்டர் ஒன்றிற்கு கூடுதலாக ரூ.3 ஊக்கத்தொகை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு பால் லிட்டருக்கு ரூ.3 அதிகரித்து கடந்த டிசம்பர் மாதம் வழங்கியது.
அதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றிற்கு கூடுதலாக ரூ.3 ஊக்கத்தொகையாக கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.