லக்னோ : 134 உயிர்களை பலி வாங்கிய ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கு காரணமான சாமியார் போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 134 பேர் பலியாகினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க போலீசார் முனைப்பு காட்டி வரும் நிலையில், போலே பாபா மீது வன்கொடுமை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆக்ரா, எட்டாவா, ஃபருகாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ராஜஸ்தானில் உள்ள நகரங்களிலும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஜூனியர் என்ஜினீயர் தேர்வு எனப்படும் ஜென் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிலும் சாமியார் போலே பாபாவுக்கு தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் மாநிலம் போலீசார் தெரிவிக்கின்றனர். வினாத்தாள் கசிவு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட ஹஷ்வர்தன் மீனா என்பவருக்கும் போலே பாபாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர் வழங்கிய நிலத்தில் போலே பாபா ஆசிரமம் ஒன்றை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.