கொழும்பு: இலங்கையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து இலங்கை அதிபருக்கான பொதுதேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே சுயேச்சையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
மேலும், ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா, எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச, சுதந்திர கட்சி தலைவருமான விஜயதாச ராஜபக்சே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுலா கட்சி வேட்பாளராக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், சிறுபான்மையினரான தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்னைகளுக்கும் அரசியல் தீர்வை உறுதி செய்ய இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒரு பொதுவேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வடக்கு, கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய 7 தமிழ்க்கட்சிகள், 7 குடிமை அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய பொது கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கின. இந்நிலையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன்(69) அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழ் தேசிய பொது கூட்டமைப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வௌியிட்டது.