புதுடெல்லி: டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இருக்கும் தர்பார் மண்டபத்தில் ஒன்றிய அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சிகள், பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. தர்பார் ஹால் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சிம்மாசன அறை என அழைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தர்பார் ஹால் கணதந்திர மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், “ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சூட்டப்பட்ட தர்பார் என்ற சொல் நீதிமன்றங்கள், கூட்டங்களை குறிக்கின்றன.
இந்தியா குடியரசு ஆனபிறகு தர்பார் என்ற சொல் பொருந்தாது என்பதால் குடியரசை சுட்டும் கணதந்திரம் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இங்குள்ள அசோக் ஹால் வௌிநாட்டு தூதர்கள் தங்களின் பணி நியமனை ஆணையை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியை நடத்தவும், அரசின் முக்கிய விருந்து நிகழ்ச்சிகள் தொடங்கும்முன் நிகழ்ச்சிக்கு வரும் பிரதிநிதிகளை முறைப்படி வரவேற்று அறிமுகப்படுத்தும் இடமாக உள்ளது.
இது தற்போது அசோகாமண்டபம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், “அசோகா என்பது ஒற்றுமை மற்றும் அமைதியான சகவாழ்வின் சின்னமான அசோக பேரரசரை குறிக்கிறது. ஹால் என்பது மண்டபம் என பெயரிடப்படுவதால் அசோகாவுடன் தொடர்புடைய மதிப்புகளை நிலைநிறுத்தும்போது ஆங்கில மயமாக்கலின் தடயங்களை நீக்குகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.