சென்னை: தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த சோகமான வேளையில் பல்வேறு பணிகளுக்கு மத்தியில் தமிழக மக்களின் இதயங்களில் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் வகையில் சமூகவலைதளத்தில் தாங்கள் வெளியிட்ட இரங்கல் பதிவு ஆறுதலாக இருந்தது. திருச்சி பாரதிதாசன் பல்கலை விழாவில் பேசும்போது, “விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் கேப்டன்.
அரசியலில் மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்காக உண்மையாக உழைத்தவர்” என்று குறிப்பிட்டது கேப்டனின் மறைவால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக இருந்தது. விஜயகாந்தின் சமூக பங்களிப்புக்கு மரியாதை செய்வதற்கு தாங்கள் எடுத்த நேர்மைான முயற்சிகள், தமிழ்நாட்டின் கோடிக்கணக்கானோர் இதயங்களில் சோகத்தை குறைக்க உதவியது. இதற்கு எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் நன்றி கடமைபட்டுள்ளோம். அரசியல் வேறுபாடு இருந்த போதிலும், நீண்டகாலமாக தங்களுக்கும், விஜயகாந்துக்கும் இடையே நட்பு வரலாற்றில் பொறிக்கப்படும்.