அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மனித வள மேலாண்மை துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தார். 2010-11ம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சாதி பாகுபாடின்றியும், வருமானத்தை கணக்கில் எடுத்து கொள்ளாமலும், அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்று கொள்ளும் என கடந்த 2010ம் ஆண்டு ஆணையிடப்பட்டது.

இதையடுத்து வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கடந்த 2021ம் ஆண்டு மனிதவள மேலாண்மை துறை அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்வதற்கும், முன்னுரிமை முறை பின்பற்றப்படும் பணியாளர் தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் வழங்கிடும் வகையில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேவையான ஆணைகள், அறிவுறுத்தல்களை வழங்குமாறு மனிதவள மேலாண்மைத்துறை கேட்டு கொண்டது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தக்க அறிவுரைகளை வழங்கவும், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் வழங்குவதற்காக முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான புதிய இணைய தொகுப்பு உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்

செப்டம்பர் 16: சர்வதேச ஓசோன் தினம்