பெங்களூரு: மோடியை விமர்சிப்பதால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டுமா? என்ற கருத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். கேரள இலக்கிய விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசுகையில், ‘பிரதமர் மோடியை விமர்சிப்பதால், நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 3 கட்சிகள் கூறுகின்றன. அவர்களின் அழைப்பை நான் ஏற்கவில்லை. மாறாக அவர்களிடம் இருந்து வரும் போன் காலை துண்டித்துவிட்டேன். ஏனெனில் அவர்களின் அரசியல் வலையில் விழ விரும்பவில்லை. அவர்கள் மக்களுக்காக வரவில்லை, சித்தாந்தத்திற்காக வரவில்லை. நான் மோடியை விமர்சிப்பதால் நல்ல வேட்பாளர் என்கிறார்கள்.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்கள் குரலை இழந்துவிட்டன. எந்த அரசியல் கட்சியிலும் உண்மை இல்லை. அதனால்தான் அவர்களில் பலர் தங்களது கட்சிக்கான வேட்பாளர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்’ என்றார். கடந்த சில தினங்களுக்கு முன், மகர சங்கராந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது இல்லத்தில் பசுக்களுக்கு உணவளிக்கிறார் என்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்று மோடியின் புகைப்படங்களை வெளியிட்டது. இதுகுறித்து பிரகாஷ் ராஜ் வெளியிட்ட பதிவில், ‘உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களின் நாட்டைச் சேர்ந்த ஒருவர்… இது என்ன முரண்பாடு’ என்று விமர்சனம் செய்துள்ளார்.