விழுப்புரம்: தொடர் மின்வெட்டை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தமிழகத்தின் ஒரே ஒரு நகராட்சி என்பது கோட்டக்குப்பம் நகராட்சி தான். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு கீழ் கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளது. இது ஏற்கனவே பேரூராட்சியாக இருந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் அதற்கான எந்தவித அடிப்படை வசதிகளும் இந்த இடத்தில் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக அடிப்படை தேவையான மின்சாரம் என்பது தொடர்ந்து இங்கு துண்டிக்கப்படுவதாகவும், மின் விநியோகம் பாதிக்கப்படுவதால் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் அவதிக்குள்ளாவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோட்டக்குப்பம் பகுதியில் மின்வெட்டை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
40 ஆண்டுகளாக மின்வெட்டு பாதிப்பு இருப்பதாகவும், அரசிடம் பலமுறை முறையிட்டும் தகுந்த நடவடிக்கை இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தடையில்லா மின்சாரம் வழங்கிட வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோட்டக்குப்பம் நகராட்சியில் துணைமின் நிலையம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.