பதவியை பிடிக்க வசூல் வேட்டை என வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்: சேலம் எஸ்.பி.க்கு மெமோ அனுப்பிய டிஐஜி..!!

சேலம்: பதவியை பிடிக்க வசூல் வேட்டை என வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்ட சேலம் மாவட்ட எஸ்.பி. சிவக்குமாருக்கு, மேற்கு மண்டல டிஐஜி ராஜேஸ்வரி மெமோ அளித்துள்ளார். சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா குறித்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் வாட்ஸ்அப்பில் கடந்த 14ம் தேதி வைத்த ஸ்டேட்டஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பதவியை பிடிக்க வசூல் வேட்டை என்ற தலைப்புடன் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. அதாவது, சேலம் மாநகரத்தில் திருமதி. லாவண்யா என்பவர் காவல் துணை ஆணையராக இருக்கிறார்.

இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி பெற வேண்டும் என்று கடந்த பத்து மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார். ஓய்வுபெற்ற டிஜிபி இடம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியை பெற முயற்சி செய்தார் என்று அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நண்பர் ஒருவர் அனுப்பிய தகவலை அழிப்பதற்கு பதிலாக தவறாக ஸ்டேட்டஸ் பட்டனை அழுத்திவிட்டேன் என்றும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக சேலம் மாநகர துணை ஆணையாளர் லாவண்யாவிடம் விசாரித்தபோது உயர் அதிகாரியிடம் ஸ்டேட்டஸ் தொடர்பாக புகார் அளித்திருந்ததாக தெரிவித்திருந்தார். இதனிடையே சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைத்த ஸ்டேட்டஸ் விவகாரம் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு சேலம் மாவட்ட எஸ்.பி. சிவக்குமாருக்கு, மேற்கு மண்டல டிஐஜி ராஜேஸ்வரி மெமோ அளித்துள்ளார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது