காஞ்சிபுரம்: உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு, 100க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இப்பேரணியானது கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று முடிவுற்றது. முன்னதாக, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், இணை இயக்குநர் (நலப்பணிகள்) கோபிநாத், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மலர்விழி, துணை இயக்குநர் (காசநோய்) காளீஸ்வரி, அரசு அலுவலர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.