பெங்களூரு: பெங்களூரு நகரில் மகாத்மாகாந்தி சாலையில் உள்ள ஜோயாலுக்காஸ் நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் வந்த முதியவர் விற்பனையாளரை ஏமாற்றி ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு மாநகரில் கடந்த 18ம் தேதி மாலை 6 மணி அளவில் மகாத்மாகாந்தி சாலையில் உள்ள ஜோயாலுக்காஸ் ஷோரூமிற்கு முதியவர் ஒருவர் வாடிக்கையாளர் போல் மிடுக்கான உடை அணிந்து செல்வந்தரை போல் வந்தார். முதியவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசி வைர மோதிரம் வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது அவர் விற்பனையாளர் ஜிம்மி ராயிடம் சரளமான ஆங்கிலத்தில் ஒரு சொலிடர் வைர மோதிரத்தை காட்டும்படி கேட்டார். ராய் அதற்கேற்ப வித்தியாசமான வடிவமைப்புகளுடன் கூடிய சில மோதிரங்களை காட்டினார்.
திருடன், மோதிரங்களை பார்த்துவிட்டு, ராயிடம் மேலும் வடிவமைப்புகளை காட்ட சொன்ன நிலையில் பல்வேறு மோதிரங்களை கொண்டு வர ராய் திரும்பிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சொலிடர் வைர மோதிரத்தை திருடியுள்ளார். மோதிரம் காணாமல் போனதை ராய் கவனிக்காமல் இருக்க செயற்கையான ஒரு டம்மி மோதிரத்தை ட்ரேயில் வைத்துள்ளார். திருடன் மோதிரத்தை திருடிய நிலையில் பல்வேறு காரணங்களை கூறி விட்டு நகை எதுவும் வாங்காமல் ஷோரூமை விட்டு வெளியே சென்றுள்ளார். மறுநாள் ஊழியர்கள் நகைகளை ஆய்வு செய்த போது போலியான மோதிரம் இருப்பது தெரியவந்தது. பின்பு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது முதியவர் திருடி சென்றது தெளிவாக தெரிந்தது. உடனடியாக ஷோரூம் சார்பில் கப்பன் பூங்கா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் இந்த திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருடனின் புகைப்படத்தை ஷோரூம் ஊழியர்கள் இதர கிளைகளுக்கு அனுப்பி எச்சரிக்கையுடன் இருக்கும் படி உஷார் படுத்திய நிலையில் அதே திருடன் ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் கம்மனஹள்ளியில் உள்ள ஷோரூமுக்கு கடந்த 8ம் தேதி மதியம் 2 மணியளவிலும் மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஷோரூமுக்கு கடந்த 17ம் தேதி மாலை 5.30 மணியளவிலும் சென்று திருட முயற்சித்ததும் கண்டுபிடித்துள்ளனர்.