திருமணம் செய்யாததால் அண்ணன் மகள் சீத்தலை(19) 6 மாத குழந்தையில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ஷகிலாவுக்கும் அவரது அண்ணன் மனைவி சசிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வளர்ப்பு மகள் சீத்தலுக்கு தனது தாய் சசி குறித்து ஷகிலா பேசுவது பிடிக்கவில்லை. இதனால் அவரும் ஷகிலாவிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சீத்தல், ஷகிலாவை கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதில் உடல் மற்றும் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஷகிலா, நெருங்கிய தோழி நர்மதாவிடம் கூறி அழுதுள்ளார்.
உடனே நர்மதா கோடம்பாக்கம் கங்கா நகரில் வசிக்கும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சவுந்தர்யாவை சமாதானம் செய்யும்படி அனுப்பியுள்ளார். அவர் ஷகிலா வீட்டிற்கு சென்று பிரச்னை குறித்து கேட்டறிந்தார். பின்னர் சீத்தலை செல்போனில் தொடர்பு கொண்டு பிரச்னையை பேசி தீர்த்து கொள்ளலாம் என்று அழைத்துள்ளார். அதன்படி அவர் தனது தாய் சசி(44), சகோதரி ஜமீலா(22) ஆகியோருடன் வந்துள்ளார். இருதரப்பினருடனும் பேசிய வழக்கறிஞர் சவுந்தர்யா, வளர்ப்பு தாய் ஷகிலாவை தாக்கியது தவறு என்று சீத்தலிடம் சுட்டிகாட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சீத்தல் மற்றும் அவரது தாய் சசி ஆகியோர் பெண் வக்கீலை திடீரென தாக்கினர். அவர் சுதாரித்து கொள்வதற்குள், சீத்தல் தாய் சசி அவரின் வலது கையை கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார். பிறகு 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
காயம் அடைந்த வழக்கறிஞர் சவுந்தரியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஷகிலா மற்றும் அவரது வழக்கறிஞர் சவுந்தர்யா ஆகியோர் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், ஷகிலா தரப்பில் சொத்துக்களை அபகரிக்கும் வகையில் சீத்தல் தாய் மற்றும் சகோதரியுடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், சீத்தல் தரப்பில் அவரது தாய், எனது மகளை தவறான பாதைக்கு ஷகிலா அழைத்து செல்ல முயற்சி செய்வதாகவும், அதை தட்டிகேட்ட மகளை கொடுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாற்றுவதால் இதுபற்றி உயர் போலீசார் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மாம்பலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி அனைத்து மகளிர் போலீசார் ஷகிலா மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், ஷகிலா மற்றும் வழக்கறிஞரை தாக்கிய சீத்தல் அவரது தாய் சசி, சகோதரி ஜமீலா ஆகியோர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. 3 பேரையும் நாளை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணைக்கு பிறகு தான், சீத்தல் எதனால் ஷகிலாவை தாக்கினார் என்பது குறித்து உண்மைகள் வெளியே வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கவர்ச்சி நடிகை ஷகிலா தாக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.