சிறப்பு செய்தி
எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் என்ற வார்த்தை சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இதற்கு காரணம், எங்கே தரமான பொருட்கள் உள்ளன என்பதை மக்கள் தேடி வாங்கும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதுதான். அந்த அளவிற்கு பல்வேறு கலப்படங்களால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு என சில உணவு வகைகளை கொடுத்து வந்தோம். ஊட்டச்சத்து பானங்கள் கிடையாது. இதனால் சத்து மாவு இயற்கையாக கிடைக்கும் பால், தினை வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தனர்.
பெரும்பாலான கிராமங்களில் கூட தடுப்பூசியே இல்லாமல் குழந்தைகள் நன்கு வளர்ந்து ஆரோக்கியத்தோடு இருப்பதை நாம் பார்த்து வந்துள்ளோம். குறிப்பாக, இதுபோன்ற சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு நோய் பாதிப்பு என்பது மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால், தற்பொழுது ஆறு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி, ஆறு மாத குழந்தைக்கு இணை உணவு என கடையில் விற்கப்படும் பிரபல நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உணவு வகைகள் அதற்கு என தனித்தனி பிளேவர்கள், மேலும் ஊட்டச்சத்து பானம் என்ற பெயரில் விதவிதமான கம்பெனிகள் தங்கள் விளம்பரங்களை விரிவுபடுத்தி தங்களது சந்தைகளை அமைத்து விட்டன.
அதை பார்க்கும் பொதுமக்களை மூளைச்சலவை செய்து குழந்தைகள் இந்த ஊட்டச்சத்து பானத்தை சாப்பிட்டால் ஒரு வருடத்தில் இரண்டரை அடி வளர்ந்து விடுவார்கள், ‘நான் வளர்கிறேனே மம்மி’ என விதவிதமான மாடல்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து பொதுமக்களை தங்களது நிறுவன பொருட்களை வாங்க செய்தனர். பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அவற்றை வாங்கி கொடுத்து வந்தனர். மேலும் அவர்கள் பெருமையோடு எனது குழந்தைகள் டீ, காபி எல்லாம் சாப்பிட மாட்டார்கள் என கூறி குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் பெயரில் உள்ள ஊட்டச்சத்து பானத்தின் பெயரை மிகவும் ஸ்டைலாக கூறுவதை நாம் பார்த்திருப்போம். அதிலும் கடந்த பத்து வருடங்களில் ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கும் இணை உணவுகள் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது.
இதற்கு பெற்றோர்கள் குழந்தைகள் மீது வைத்துள்ள பாசம் காரணமா? அல்லது குழந்தைகளுக்கான உணவுகளை வீட்டில் தாங்களே தயாரித்து கொடுக்க முடியாத சோம்பேறித்தனம் காரணமா? என்பதற்கு தனியாக ஒரு விவாதம் நடத்தலாம். அந்த அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கான உணவு வகைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்து விட்டன.
அப்படி என்ன அந்த உணவு வகையில் இருக்கிறது என்று பார்த்தால் பழத்தில் உள்ள சத்துக்கள், காய்கறியில் உள்ள சத்துக்கள், புரோட்டின் விட்டமின் மாவுச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளதாக அதில் விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த சத்துக்களை எல்லாம் இவர்கள் விண்வெளியில் இருந்தோ அல்லது கிடைக்காத ஒரு இடத்தில் இருந்தோ கொண்டு வரவில்லை. சாதாரணமாக நமக்கு கிடைக்கும் காய்கறி மற்றும் பழ வகைகளில் இருந்து எடுக்கப்பட்டவைதான் இவை. அதனை எடுத்து பதப்படுத்தி அதனுடன் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல்களை உட்புகுத்தி அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட வேண்டும் என்பதற்காக சர்க்கரை அளவை கூட்டி பிளேவர்களை திணித்து அதன் பிறகு சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாகவும் அதை அப்படியே எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி குழந்தைகளுக்கு எளிதில் ஊட்டலாம் என்பதற்காக இதனை பெரும்பாலான வீடுகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். அதிலும் தங்களது குழந்தைகள் புத்திசாலித்தனமாகவும் நல்ல வளர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இதனை அதிக அளவில் இளம் பெற்றோர்கள் வாங்கி தங்களின் குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.
எப்பொழுதும் ஏதாவது ஒரு பெரிய பிரச்னை வந்தால் மட்டுமே அதனைப் பற்றி யோசிக்கும் நம்மவர்கள் மற்ற நேரங்களில் அதனைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். அந்த வகையில் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் கொடிகட்டி பறந்த மிகப்பெரிய ஒரு நிறுவனத்தில் உணவு பொருட்களில் அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு பொருளில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதில் பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் உணவு பொருட்களில் இந்தியா, ஆப்பிரிக்காவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்புகளில் ஐரோப்பாவை விட அதிக சர்க்கரை அளவுள்ள உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனமான பப்ளிக் ஐ மற்றும் சர்வதேச குழந்தை உணவு நடவடிக்கை நெட்வொர்க் ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது பல்வேறு நாடுகளில் உள்ள பிரபல குழந்தைகள் உணவு தயாரிப்புகளில் உள்ள சர்க்கரை அளவை ஆராய்ச்சி செய்தது. இதில் அப்பட்டமான பல்வேறு வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 150 குழந்தைகள் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் தெற்காசியாவில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை இந்த ஆய்வு நிறுவனம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிக்கை பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பி உள்ளது. எத்தனை பேர் செய்தித்தாள்களையும் டிவியில் செய்திகளையும் பார்க்கிறார்கள் என்பது அந்தந்த குடும்பங்களுக்கே வெளிச்சம். அப்படி இருக்க, இதுபோன்ற செய்திகள் அனைத்து பொதுமக்களையும் சென்றடையுமா என்றால் கண்டிப்பாக கிடையாது. தொடர்ந்து குழந்தைகள் உணவு விஷயத்தில் பொதுமக்கள் தவறிழைக்கும் அபாயம் உள்ளது. எனவே குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஒரு காலகட்டத்தில் 50 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு இணை நோய்கள் காணப்பட்டன. ஆனால் இன்றைக்கு அது முப்பது வயதை அடைந்துள்ளது. ஆனால் தற்போதும் சில குழந்தைகளுக்கு பத்து வயதிலேயே சர்க்கரை நோய் வந்து அவர்கள் இன்சுலின் பயன்படுத்துவதை நம் கண்கூடாக பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம் என்று ஒருபோதும் ஆராய்ச்சி செய்தது கிடையாது.
இந்தியா உள்ளிட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் ஒரு நோய் வருகிறது என்றால் அந்த நோய்க்கான மருந்துகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அந்த நோயை எவ்வாறு சரிப்படுத்த முடியும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் அந்த நோய் எதனால் வந்தது என்பதை யாரும் ஆய்வு செய்வதே கிடையாது. இதனால் நாளுக்கு நாள் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதற்கான மருந்துகளும் விற்பனை ஆகிக்கொண்டே இருக்கின்றன.
ஆனால் தீர்வுகள் என்பது என்னவோ ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. 10 வயதில் ஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் வந்தால் காலம் முழுவதும் அந்த குழந்தை மருந்து மாத்திரையுடன் தான் வாழ்க்கையை நடத்த வேண்டும். இது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம் என்பதை பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே குழந்தைகளுக்கு தரப்படும் உணவு வகைகளில் எதுபோன்ற உணவு வகைகள் கலந்துள்ளன எது நல்லது என்பதை தேர்ந்தெடுத்து தர வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
நல்ல கல்வி, செல்வம் இவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பது முக்கியமல்ல. அதை அவர்கள் பயன்படுத்துவதற்கு நல்ல உடல் நிலையை பெற்றவர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டும். எனவே குழந்தைகளுக்கான உணவு விஷயத்தில் இனியாவது பெற்றோர்கள் விழித்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.
நாடுகளுக்கு நாடு வித்தியாசம்
ஆறு மாத குழந்தைகளுக்கு தயார் செய்யப்படும் கோதுமை சார்ந்த தயாரிப்புகளை பிரபல தனியார் உணவு நிறுவனம் தயாரித்தது. அதில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் விற்கப்படும் உணவுப் பொருட்களை சோதனை செய்தபோது கூடுதல் சர்க்கரை அளவுகள் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அதே நிறுவனம் தயாரித்து இந்தியாவில் பயன்படுத்தப்படும் பொருட்களில் 2.7 கிராம் கூடுதல் சர்க்கரை இருப்பது தெரிய வந்தது. அதே பொருள் தாய்லாந்திலும் விற்கப்படுகிறது. அதில் சர்க்கரை அளவு 6 கிராமாக உயர்ந்து இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம் இந்தியாவில் தயார் செய்யும் 15 தயாரிப்புகளை சோதனை செய்தபோது சராசரியாக 2.0 சர்க்கரை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
தயாரிப்பு நிறுவனத்தின் பதில்
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனியார் நிறுவனம் இதுகுறித்து பதில் அளிக்கையில், குழந்தைகளுக்கான எங்கள் தயாரிப்புகளில் ஊட்டச்சத்து தரத்தை நாங்கள் நம்புகிறோம். மேலும் உயர்தர பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்களது நிறுவனம் சர்க்கரை அளவை குறைத்துள்ளது. தொடர்ந்து எங்களது நிறுவனத்தின் பொருட்களை மதிப்பாய்வு செய்து பாதுகாப்பு மற்றும் சுவை ஆகியவற்றின் சமரசம் செய்யாமல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின் அளவை மேலும் குறைக்க எங்களது தயாரிப்புகளை புதுமைப்படுத்துகின்றோம் என தெரிவித்துள்ளது.
பிரச்னை எதனால் வந்தது தெரியாது
பிரபல தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது குறித்து புதுச்சேரியை சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறியதாவது:
குழந்தைகளின் உணவுப் பொருட்களில் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் மூலம் படிப்படியாக பிரச்னைகள் ஏற்படும். ஆட்டிசம் குறைபாடு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவிட்டி எனப்படும் ஒருவித பிரச்னைக்கு குழந்தைகள் ஆளாவார்கள். அதாவது நாம் சொல்வதை விட பலமடங்கு விஷயங்களை அவர்கள் செய்வார்கள். துறுதுறுவென்று இருப்பார்கள். இதுபோன்ற பிரச்னைகளை பல பெற்றோர்கள் பார்த்திருப்பார்கள். மேலும் தற்போது சிறுவயதிலேயே 10 வயது குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வந்து விடுகிறது. அவர்கள் இன்சுலின் போடுவதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம்.
ஆனால் அவர்களுக்கு ஏன் இந்த சர்க்கரை நோய் வந்தது என யாரும் ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். இதற்கு இதுதான் முடிவு என்பதை துல்லியமாக மருத்துவ உலகம் இதுவரை எடுத்துக் கூறவில்லை. அதனால் ஊட்டச்சத்து பானங்கள் சாப்பிட்டதால் தான் தனது குழந்தைக்கு சர்க்கரை நோய் வந்தது என பெற்றோர்களே நம்ப மாட்டார்கள்.
ஆனால் அதுதான் உண்மை. குழந்தைகள் ஆறு மாதத்தில் இருக்கும் பொழுது பல்வேறு இணை உணவுகளை தருவார்கள். அதில் ஆரம்பித்து படிப்படியாக குழந்தைகளின் உணவுகளில் சர்க்கரை அளவு சேர்க்கப்படுகிறது. இதை நாம் கண்டுபிடிப்பது முடியாத காரியம். இணை உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை குழந்தைகளுக்கு சேர்த்தால் கெடுதல் என பெரும்பாலும் நமக்கு கூற மாட்டார்கள். ஆனால் ஆய்வறிக்கைகள் கெடுதல் என தொடர்ந்து கூறி வருகிறது. இதுதான் உண்மை. குழந்தைகள் வயிறு வலிக்கிறது என வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். குழந்தைகளுக்கு சுவையான உணவுகளை கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள். இவை எல்லாம் இதுபோன்ற நிறுவன தயாரிப்புகளுக்கு மூலதனமாக அமைந்து விடுகிறது. இதிலிருந்து பெற்றோர்கள் வெளியே வரவேண்டும். குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு தாய்ப்பால் தான் நல்ல ஊட்டச்சத்து. அதன் பிறகு இயற்கையாக கிடைக்கும் கிழங்கு, பருப்பு உள்ளிட்ட சத்து வாய்ந்த உணவுகளை வேக வைத்து கொடுத்தாலே குழந்தைகளுக்கு நல்ல சத்து கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.