ரோம்: போப் பிரான்சிஸ்(86) கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்நிலையில் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவர் திடீரென மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். இது அவரது வழக்கமான மருத்துவ பரிசோதனை என கூறப்பட்டது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருக்கு 13 அங்குலம் அளவு பெருங்குடல் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சை முடிந்து போப் அடுத்து சில நாட்களுக்கு மருத்துவமனையிலேயே தங்கி இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.