பூந்தமல்லி நகர்ப்புற சமுதாய நல மையத்தில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு

பூந்தமல்லி: உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை 120 நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை மற்றும் தாய்க்கு ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரம் ‘தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம், பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி நகர்ப்புற சமுதாய நல மையத்தில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழா கொண்டாட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சங்கரி, வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா, மாவட்ட பயிற்சி அலுவலர் ராமகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு சத்தான உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம், தாய்ப்பால் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

இதில் குழந்தைகளுக்கு பிறந்த 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தல், 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுத்தல், பணிபுரியும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சவால்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் பற்றியும், தாய்ப்பால் கொடுக்கும் முறை, தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவுகள் குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்