பூந்தமல்லி பகுதியில் தொடர்ந்து அடாவடி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு பிரபல ரவுடி உள்பட 7பேர் கும்பல் கைது

திருவள்ளூர்: பூந்தமல்லி பகுதியில் செங்கல் சேம்பர் அதிபர்கள் உள்பட தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்துவந்த பிரபல ரவுடி உள்பட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை அருகே பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் மற்றும் பில்டர்கள் ஆகியோரிடம் மாமூல் கேட்டு ஒரு கும்பல் பணம் பறித்துவருவதாக பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் ஜவகரிடம் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன்அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்தநிலையில், பூந்தமல்லி அடுத்த மேல்மனம்பேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஷ் (32), விஷ்வா (23) மற்றும் இவர்களது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் ராஜேஷ் மீது ஏற்கனவே 4 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு, ஆள் கடத்தல், கூட்டுக் கொள்ளை, பணம் கேட்டு மிரட்டல் என 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுபோல் விசுவா மீது கொலை, கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை என 6 வழக்குகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து ராஜேஷ், விஷ்வாவை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், ராஜேஷின் கூட்டாளிகள் 5 பேர் செவ்வாப்பேட்டை அடுத்த அயத்தூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆணையர் ஜவகர் தலைமையில் தனிப்படையினர் விரைந்து வந்து அங்கிருந்த ராஜேஷ், விஷ்வா ஆகியோரை கைது செய்து இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோல் அயத்தூரில் பதுங்கியிருந்த மேல்மனம்பேடு பகுதியை சேர்ந்த கணேசன், நவீன், சசிதரன், வெள்ளவேடு பகுதியை சேர்ந்த கார்த்திக், காவல்சேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 பைக், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்