ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி போந்தவாக்கம் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். போந்தவாக்கம், மாதவரம் பகுதியை சேர்ந்த மக்கள் இங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குகின்றனர். ஆனால் மாதவரம் பகுதியை சேர்ந்த மக்கள் நீண்ட தூரம் நடந்து பொருட்கள் வாங்குவதால் மிகவும் சிரமப்பட்டனர்.
இதனால் மாதவரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என்று மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2023 – 2024ம் ஆண்டு ₹ 12.30 லட்சம் செலவில் ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை மக்களின் பயன்பாட்டிற்கு விடாததால் அப்பகுதி சேர்ந்தவர்கள் மாடுகளை கட்டிப்போட்டு தொழுவமாக மாற்றிவிட்டனர். எனவே, ரேஷன் கடையை பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.