Saturday, September 21, 2024
Home » பொன்னேரியில் தண்டவாள போல்ட்டுகளை கழற்றி மின்சார ரயிலை கவிழ்க்க சதி?.. மர்ம நபர்களுக்கு வலை; 2 தனிப்படை தீவிர விசாரணை

பொன்னேரியில் தண்டவாள போல்ட்டுகளை கழற்றி மின்சார ரயிலை கவிழ்க்க சதி?.. மர்ம நபர்களுக்கு வலை; 2 தனிப்படை தீவிர விசாரணை

by Neethimaan


பொன்னேரி: பொன்னேரி அருகே இன்று அதிகாலை சிக்னலுடன் தண்டவாளத்தை மாற்றும் இணைப்பு பெட்டியுடன் இருந்த பகுதியில் அனைத்து போல்ட்டுகள் கழற்றப்பட்டு கிடந்தன. அவற்றை ஊழியர்கள் உடனடியாக கண்டறிந்து சீரமைத்தனர். இதன்மூலம் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி செய்தார்களா என பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பணி நிமித்தமாக ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொன்னேரி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலையில் வழக்கம் போல ஊழியர்கள் கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, தண்டவாளத்தை மாற்றும் இணைப்பு பெட்டியில் இருந்த அனைத்து போல்ட்டுகளும் கழற்றப்பட்டு சிதறி கிடந்தன. இதனால் ரயில் நிலையத்தில் பிற ரயில்கள் மற்றும் கேட்டில் பிற வாகனங்களுக்கு சிக்னல் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே தகவலின் பேரில் ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, அனைத்து போல்ட்டுகளையும் மீண்டும் இணைத்தனர். இதனால் அப்பகுதியில் சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாள கம்பிகளை தரையில் உள்ள கான்கிரீட் கற்களுடன் இணைக்கும் 95 இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டு கிடந்தது. இதை கண்ட ஊழியர்கள், உடனடியாக ரயில்களை நிறுத்தி, இணைப்பு கம்பிகளை பொருத்தி, மீண்டும் ரயில் சேவையை சீரமைத்தனர். இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதே போன்று இன்றும் போல்ட்டுகள் கழற்றப்பட்டு சிதறி கிடந்தன. இதன்மூலம் மின்சார ரயில்களை கவிழ்க்க மர்ம நபர்கள் சதிச்செயல்களில் ஈடுபட்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என ரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். பொன்னேரி ரயில் நிலைய பகுதியில் நடைபெற்ற இரு சம்பவங்கள் குறித்து 2 தனிப்படை போலீசாரும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

five × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi