அதைத்தொடர்ந்து கேரள வனத்துறையும், போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நாராயணசாமி என்பவர் தலைமையில் பூஜை நடந்தது தெரியவந்தது. இவர்களுக்கு வனத்துறை ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பணம் வாங்கி பொன்னம்பலமேடு பகுதிக்குள் அனுமதித்த வனத்துறை ஊழியர்கள் 2 பேர் மற்றும் குமுளியை சேர்ந்த ஒருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சபரிமலை சிறப்பு ஆணையர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சபரிமலை கோயிலின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த செயல் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி மற்றும் பெரியார் மேற்கு கோட்ட வனத்துறை இணை இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.