Sunday, October 6, 2024
Home » பொன்னம்பலமேட்டில் அத்துமீறி பூஜை தாமாக வழக்குப்பதிவு செய்து கேரள ஐகோர்ட் விசாரணை

பொன்னம்பலமேட்டில் அத்துமீறி பூஜை தாமாக வழக்குப்பதிவு செய்து கேரள ஐகோர்ட் விசாரணை

by Karthik Yash
Published: Last Updated on

திருவனந்தபுரம்: சபரிமலை பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கு பூஜை தினத்தன்று மகரஜோதி ஏற்றப்படும். இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் முன் அனுமதியில்லாமல் வேறு யாரும் இங்கு செல்ல முடியாது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலர் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதைத்தொடர்ந்து கேரள வனத்துறையும், போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நாராயணசாமி என்பவர் தலைமையில் பூஜை நடந்தது தெரியவந்தது. இவர்களுக்கு வனத்துறை ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பணம் வாங்கி பொன்னம்பலமேடு பகுதிக்குள் அனுமதித்த வனத்துறை ஊழியர்கள் 2 பேர் மற்றும் குமுளியை சேர்ந்த ஒருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சபரிமலை சிறப்பு ஆணையர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சபரிமலை கோயிலின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த செயல் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி மற்றும் பெரியார் மேற்கு கோட்ட வனத்துறை இணை இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

4 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi