பொன்னை: பொன்னை அருகே கீரைசாத்து ஏரிக்கரை பகுதியில் பழமை வாய்ந்த பொன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கீரைசாத்து ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமை மற்றும் ஆடி மாதத்தில் விஷேச பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் நேற்று மாலை கோயில் வழியாக சென்றவர்கள், கோயிலின் இரும்பு கேட்டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அருகே சென்று பார்த்த அந்த கேட்டில் எவர்சில்வர் தவலையால் செய்து வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பொன்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். உண்டியல் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.