புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை 30 நாட்களுக்கு நீதிபதி நிறுத்திவைத்திருந்தார். மேலும் ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் சரணடைய பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனுவில் ஏற்கனவே பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சரணடைவைதில் இருந்து விலக்கு கேட்டு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை பரிசீலித்த உச்சநீதிமன்றம், சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.