ஆவடி: பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ரேஷன் புடவையால் கட்சியின் பெயர் பலகை மறைக்கப்பட்ட சம்பவம் அயப்பாக்கம் ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி, ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு, திருநின்றவூர் மற்றும் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி பகுதிகளில், ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்சி பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல், அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் நலத்திட்ட பணிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் பெயர்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை அயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையில், திமுக கட்சி கொடியுடன் கூடிய கம்பங்கள் அகற்றப்பட்டன. இதில் கம்பத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருந்த பெயர் பலகை, பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ரேஷன் புடவையில் மறைக்கப்பட்டது. இது பொது மக்கள் மற்றும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.