பாலக்காடு : குன்னம் குளம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற மருந்துக்கடை பெண் ஊழியரின் இடது கண்ணில், அப்பகுதி கடையில் பொருத்தியிருந்த கம்பி துளைத்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ். இவரது மனைவி ரம்யா (37). இவர் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் நகராட்சிக்கு உட்பட்ட குருவாயூர் சாலையோரத்தில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள கடையின் முகப்பில் நீண்டு கொண்டு இருந்த இரும்புக்கம்பி எதிர்பாராத வகையில் ரம்யாவின் இடது கண் பகுதியில் துளைத்தது.
இதனால் படுகாயம் அடைந்து ரத்தம் வழிந்த நிலையில் வலியால் ரம்யா அலறி துடித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் அவரை மீட்டு குன்னம்குளம் தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அங்கமாலியில் உள்ள லிட்டில் பிளவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின்னர் ரம்யா குணமடைந்தார். இது குறித்து குன்னம்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.