Tuesday, September 17, 2024
Home » பொற்பனைக்கோட்டை திருவிழா: அகழாய்வில் கண்டுபிடித்த 875 பொருட்களை பார்வையிட குவிந்த மக்கள்

பொற்பனைக்கோட்டை திருவிழா: அகழாய்வில் கண்டுபிடித்த 875 பொருட்களை பார்வையிட குவிந்த மக்கள்

by Mahaprabhu

புதுக்கோட்டை: பொற்பனைகோட்டை ஆதி முனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழாவுக்கு வந்த மக்கள் அருகே நடைபெற்று வரும் அகழாய்வு இடத்தை பார்வையிட குவிந்தனர். காட்சிப்படுத்தப்பட்டிருந்த 875 தொன்மையான பொருட்களை கண்டு வியப்படைந்தனர். தமிழ்நாட்டிலேயே அதிக தொல்லியல் எச்சங்கள் நிறைந்த மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் கருதப் படுகிறது. புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவில் பண்டைய கால மனிதர்களின் வாழ்விடம் இருந்ததற்கான கிடைத்த சான்றின் அடிப்படையிலும், இந்தப் பகுதியில் அமைந்துள்ள சங்க கால கோட்டையை அகழ்வாய்வு செய்ய வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததன் விளைவாகவும் கடந்த 20-5-2023 முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் முதற்கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது கடந்த 44 நாட்களாக இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இதுவரை 875 தொன்மையான பொருட்கள் அகழாய்வில் கிடைத்துள்ளது. இவை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கூறப்படும் புதுக்கோட்டையில் காவல் தெய்வமாக விளங்கும் பொற்பனைக்கோட்டை ஆதி முனீஸ்வரர் கோயில் ஆடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்கு அருகே தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தலைமையிலான குழுவினர் அரன்மனைதிடலில் நீராவி குளக்கரையில் அகழாய்வு செய்து வரும் பணிகளை, பார்வையிட்டு அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப்பட்ட தொன்மையான பொருட்களை கண்டு வியப்படைந்தனர். அவர்களுக்கு தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியும் அதிலிருந்து கிடைக்கப்பெற்ற பொருட்கள் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

8 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi