Thursday, June 27, 2024
Home » ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் 57 தொகுதியில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: மோடி உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் 57 தொகுதியில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: மோடி உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

by Suresh

புதுடெல்லி: வரும் ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் 57 தொகுதியில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 6 கட்டமாக நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 543 ெதாகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்தது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு மட்டும் 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கட்டத்தில் பீகாரில் 8 இடங்கள், சண்டிகரில் 1 இடம், இமாச்சல பிரதேசத்தில் 4 இடங்கள், ஜார்கண்ட்டில் 3 இடங்கள், ஒடிசாவில் 6 இடங்கள், பஞ்சாப்பில் 13 இடங்கள், உத்தரபிரதேசத்தில் 13 இடங்கள், மேற்குவங்கத்தில் 9 இடங்கள் என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 57 எம்பி பதவிகளுக்கும் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் முக்கிய விஐபி வேட்பாளரான பிரதமர் மோடி 3வது முறையாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் (இந்தியா கூட்டணி வேட்பாளராக) அஜய் ராய் போட்டியிட்டுள்ளார். அதேபோல் முக்கிய வேட்பாளர்கள் பட்டியல் மாநிலம் வாரியாக உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் நடிகர் ரவி கிஷன் (பாஜக), மிர்சாபூரில் அப்னா தளம் கட்சி தலைவரும், ஒன்றிய அமைச்சருமான அனுப்ரியா படேல், சண்டவுலியில் ஒன்றிய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே (பாஜக), பீகார் மாநிலம் பாட்னா சாஹிப்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (பாஜக), பாடலிபுத்ராவில் லாலு மகளான மிசா பார்தி (ஆர்ஜேடி), இமாச்சல் பிரதேசம் காங்க்ராவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆனந்த் சர்மா (காங்கிரஸ்), மண்டியில் நடிகை கங்கனா ரனாவத் (பாஜக), அவரை எதிர்த்து மாநில அமைச்சர் விக்ரமாதித்ய சிங் (காங்கிரஸ்), ஹமிர்பூரில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் (பாஜக), பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இலங்கை, அமெரிக்காவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தரண்ஜித் சிங் சந்து (பாஜக), ஜலந்தரில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி (காங்கிரஸ்), பதிண்டாவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோன்மணி), பாட்டியாலாவில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் (பாஜக), மேற்குவங்க மாநிலம் டயமண்ட் ஹார்பரில் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல்), ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மருமகள் சீதா சோரன் (பாஜக), சண்டிகரில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மணீஷ் திவாரி (காங்கிரஸ்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். 7ம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுநாளுடன் பிரசாரம் ஓய்வதால், தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் அன்றைய தினம் 6 மணிக்கு மேல், தனியார் செய்தி நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும்.

அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் ஜூன் 2ல் வாக்கு எண்ணிக்கை: நாடாளுமன்ற தேர்தலுடன் சிக்கிம், ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவை தேர்தலும் நடைபெற்றது. அதில் ஒடிசாவில் மட்டும் வரும் ஜூன் 1ம் தேதி 7 மக்களவை தேர்தலுடன் 41 சட்டப் பேரவை ெதாகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களின் சட்டப் பேரவை பதவிக்காலம் ஜூன் 2ம் தேதி முடிவடைகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலை நடத்தி முடித்துவிட்டாலும் கூட, முடிவுகள் ஜூன் 2ம் தேதிக்குள் அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கு காரணம் ஜூன் 4ம் தேதி நாடு முழுவதும் பதிவான மக்களவை தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதனால் மேற்கண்ட இரு மாநிலங்களிலும் மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் முன்கூட்டியே வரும் ஜூன் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாரணாசியில் ராகுல் பிரசாரம்: மேற்குவங்கம், உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் 7 கட்டங்களும் தேர்தல் நடைபெறுகிறது. அந்தவகையில் மேற்கண்ட மாநிலங்களில் 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டது. வரும் ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடப்பதால் பிரதமர் மோடி இன்று கொல்கத்தாவில் மெகா ரோட்ஷோ நடத்துகிறார். ஷயாம்பஜாரில் இருந்து சுவாமி விவேகானந்தரின் மூதாதையர் இல்லம் வரை 2.5 கிமீ தூரம் ரோட்ஷோ நடத்துகிறார்.

மேற்குவங்கத்தில் 2 நாட்கள் மோடி பிரசாரம் மேற்கொள்வதாக மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ஒடிசாவின் சந்த்பாலி, கோரே, நிமாபாதா ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் பேரணிகளில் உரையாற்றுகிறார். மோடி போட்டியிடும் வாரணாசியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றுகின்றனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கலந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi