பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள சில குவாரிகளிலிருந்து, கனரக வாகனங்களில் தடையை மீறி அதிகளவு களிமவளம் கொண்டு செல்வதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த சில வாரமாக, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, பல்லடம் ரோடு, மீன்கரை ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருவாய்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதில், உடுமலைரோடு வழியாக அதிக கனிம வளங்களை ஏற்றி கொண்டு, கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. உடுமலை ரோடு உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்ட வருவாய்துறையினர், வெவ்வேறு நாட்களில் அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, அதில், குறிப்பிட்ட அளவை விட கூடுதல் அளவில் கல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.
மேலும், அந்த கனிம வளங்களை கொண்டு செல்லும்போது, அதில் எந்தவித பாதுகாப்பு தடுப்புகளே இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வெவ்வேறு பகுதியிலிருந்து கேரள மாநில பகுதிக்கு அதிக எடையுடன் கனிம வளங்கள் கடத்தி சென்ற சுமார் 6 லாரிகளை, வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலகத்தில் நிறுத்தியுள்ளனர். விதிமீறல் லாரிகளுக்கு அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.