பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் பல நாட்களாக தொடர்ந்து பெய்த பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரவலான மழையால் கிராமப்புறசாலைகள் பசுமையானது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மே மாதத்தில் இரண்டு வாரம் மட்டுமே கோடை மழை பெய்தது. அதன்பின், ஜூன் மாதம் இறுதியிலிருந்து தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. அதிலும், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பகல் தொடர்ந்து பருவமழை பெய்துள்ளது. அதிலும் பல நாட்கள் பகல், இரவு என விடிய விடிய மழை பெய்துள்ளது.
நேற்றும் அதிகாலை முதல் பருவமழை தொடர்ந்து பெய்துள்ளது. அதுபோல், ஆனைமலை, கோட்டூர், அம்பராம்பாளையம், ராமபட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், தொடர்ந்து மீண்டும் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் இருந்தபோது, கிராமப்புறங்களில் உள்ள சாலையோரம் நின்ற செடிக்கொடிகள் மற்றும் மரங்கள் வாடி வதங்கியபடி இருந்தது. கோடை மழைக்கு பிறகு பல இடங்களில் மீண்டும் செடி, கொடிகள் செழிக்க ஆரம்பித்தன.
அதிலும், இந்த மாதத்தில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து பெய்த பருவமழையால், விவசாயம் நிறைந்த கிராமப்புறங்களில் ரோட்டோரம் உள்ள செடி, கொடிகள் மற்றும் மரங்கள் அனைத்தும் பச்சை பசேல் என, பச்சை போர்வை போர்த்தி வைத்திருப்பதுபோல் செழித்துள்ளது. கிராமங்கள் வழியாக வாகனங்களில் செல்வோர், இயற்கையை ரசித்து செல்கின்றனர்.