சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தனது 75வது பிறந்தநாள் பவள விழாவை நேற்று கொண்டாடினார். பிறந்தநாள் விழா, முத்தமிழ் களஞ்சியம் கலை இலக்கியப் பேரவையின் தொடக்க விழா தி.நகரில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இ.வி.கே.எஸ்.இளங்கோவன், கவிஞர் முத்துலிங்கம், வரலாற்று ஆசிரியர் மருதுமோகன் உள்ளிட்டோர் வாழ்த்தினர். முத்தமிழ் களஞ்சியம் கலை இலக்கியப்பேரவையின் பொதுச்செயலாளர் முத்துக்கண்ணன் அறிமுக உரையாற்றினார். முன்னாள் தலைமை பொறியாளர் கே.விஜயகுமார் வரவேற்றார். திருநாவுக்கரசரின் மகன் அன்பரசன் நன்றி கூறினார். திருநாவுக்கரசர் பேசுகையில், “எம்.ஜி.ஆர். காலம் தொட்டு 50 ஆண்டு காலமாக அரசியல் தவிர வேறு எந்த தொழிலையும் செய்யாமல் இருந்து வருகிறேன்.
என் ஆயுள் காலம் வரை அரசியலில் தான் ஈடுபட இருக்கிறேன் ” என்றார். விழாவில், ராமச்சந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி எஸ்.பாஸ்கர், எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், திமுக வர்த்தகரணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் ஆளுயர மாலை அணிவித்தார். கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராகுல்காந்தி, சபாநாயகர் ஓம்பிர்லா தொலைபேசி யில் வாழ்த்து தெரிவித்தனர்.