சென்னை: திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய அரசியல் நடவடிக்கைதான், அரசியல் சித்து விளையாட்டை பா.ஜ.க. தொடங்கிவிட்டது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது; திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய அரசியல் நடவடிக்கைதான், அரசியல் சித்து விளையாட்டை பா.ஜ.க. தொடங்கிவிட்டது. பா.ஜ.க.வை ஆதரித்து பேசினால் கண்டும் காணாமல் போய்விடுவார்கள், நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். நள்ளிரவில் செந்தில் பாலாஜியை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. முதலமைச்சரை அச்சுறுத்துவதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். இது ஜனநாயக நடவடிக்கை என்றோ, சட்டப்பூர்வ நடவடிக்கை என்றோ கருத முடியாது. இந்தப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என்றார்.