பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அளித்த பேட்டி: கிறிஸ்தவத்துக்கோ, இஸ்லாமியத்துக்கோ மதம் மாறினால் இடஒதுக்கீடு இல்லை என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பாகுபாடாகும். கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களையும் பட்டியல் இனத்தில் சேர்த்து இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளை வழங்க கோரி அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இந்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார். இது வரவேற்கக்கூடியதாகும். அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் சாதிய ஒழிப்பையே முன்னிருத்தி களமாடியுள்ளனர்.
அண்ணாமலை வெளியிட்டது, சொத்து பட்டியலாகும். சொத்துபட்டியலை தேர்தல் அலுவலகங்களில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணத்தை திருடி அறிக்கையாக வெளியிட்டு பேசியுள்ளார். தன்னை பற்றி ஊடகம் பேச வேண்டும் என நினைக்கிறார். அரசியல் நகைச்சுவை மன்னராக அண்ணாமலை உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் அவ்வப்போது ஆணவக்கொலை நடக்கிறது. இது ஆபத்தான அறிகுறியாகும். ஆணவக்கொலை தடுப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது முதல்படியாகும். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.