தெலங்கானா: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும், ஐதராபாத்- சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் பயணிகளுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. மதிய வேளையில் ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் சூலூர்பேட்டை- அக்கம்பேட்டா ஆற்று பாலத்தின் மீது ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெனரல் கோச்சில் பயணித்த மர்ம ஆசாமி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். இதனால் குறிப்பிட்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் என்ன நடந்தது என்று தெரியாமலும், கீழே இறங்க முடியாமலும் பீதியடைந்து தவித்தனர். மேலும் அவசரகால பிரேக்கிற்கான பிரஷர் வால்வு ரீசெட் ஆகாததால் இன்ஜின் டிரைவரால் ரயிலை இயக்க முடியவில்லை.
உடனடியாக தீர்வு கிடைக்காத நிலையில் சென்னை கோட்டத்தைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை(ஆர்பிஎப்) கான்ஸ்டபிள் ராகுல் குமார், உதவி லோகோ பைலட்டின் உதவியுடன் இக்கட்டான சூழலுக்கு தீர்வு காண ஆலோசித்தார். அப்போது கான்ஸ்டபிள் ராகுல் குமார் மற்றும் உதவி லோகோ பைலட் அருகிலுள்ள ஆற்றங்கரையில் கிரேன் கொண்டு பணிகள் நடைபெற்று வந்ததை பார்த்தனர். உடனடியாக அவர்கள் ஆற்றங்கரையில் இறங்கி கிரேன் டிரைவரின் உதவியை நாடினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கிரேன் டிரைவர் உதவ ஒப்புக்கொண்டார். உடனடியாக தயக்கமின்றி, கான்ஸ்டபிள் கிரேன் பக்கெட்டில் ஏறினார். பாலத்தின் மத்தியில் நின்ற ரயிலுக்கு அடியில் கிரேன் மூலம் மேலே பாலத்தில் ஏறி அவசரகால பிரேக்கிற்கான பிரஷர் வால்வை ரீசெட் செய்தார். அதன் பிறகு தொடர்ந்து ரயில் இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தை ரயிலில் இருந்த பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர். இதனால் போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.